×

மேட்டுப்பாளையம் நடூரில் 17 பேர் பலி: குடும்பத்துக்கு தலா 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கோவையில் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

கோவை: மேட்டுப்பாளையம் நடூரில் 17 பேர் பலியான சம்பவத்தில் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த 2ம் தேதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் சுவரின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது திருமாவளவன் பேசுைகயில், தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் மீது பழிவாங்கும் எண்ணத்தால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மேட்டுப்பாளையத்தில் 17 தலித்கள் மரணத்திற்கு காரணமான சிவசுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் தீண்டாமை சுவர், தீண்டாமை சாலை, தீண்டாமை நீர் நிலைகள், உணவகங்கள், கோயில், சுடுகாடுகள் போன்ற வடிவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடியுரிமை சட்டம் கண்டிக்கத்தக்கது. இதற்காக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். கருப்புக்கொடி: இதனிடையே திருமாவளவனுக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதாக அனுமன் சேனா அமைப்பின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 8 பேரும், பாரத் சேனா அமைப்பின் செயலாளர் குமரேசன் தலைமையில் 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Tags : Mettupalayam Nadur ,demonstration ,Kovil Natur Mettupalayam ,Thirumavalavan , Mettupalayam, Nadur, 17 killed, Coimbatore, Thirumavalavan
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்