சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 39 ஆயிரத்து 916 பதவிகளுக்கு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 19ம் தேதி 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினம் மாலையே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இதன்அடிப்படையில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் கூட்டம் நடத்தி, தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். டிசம்பர் 27, 29 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2020 ஜனவரி 2ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.