×

சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகால மரத்தை வெட்டுவதா?: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: திருப்போரூர்-செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகாலமாக இருந்து வரும் மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை அடுத்த திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையின் நீளம் 27 கி.மீ.  இச்சாலை தற்போது இருவழிப்பாதையாக உள்ளது. சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல ஓ.எம்.ஆர். சாலை மற்றும் திருப்போரூர் வழியாக மாற்று வழி உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரு வழிப்பாதையாக உள்ள திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை நான்கு வழிப்பாதையாக மாற்றம் செய்ய பணிகள் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகின்றன. இந்த சாலைப்பணிக்காக சாலையோரம் இருக்கும் 400 மரங்கள் வெட்டப்படுகின்றன. சாலைப்பணிக்காக தோண்டப்படும் பழமை வாய்ந்த மரங்களை மறு நடவு செய்யும் திட்டம் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் 100 வருட பழமை மிக்க ஆலமரம் மறுநடவு செய்யப்பட்டது. ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப் படவில்லை.

இதனால், செங்கல்பட்டு - திருப்போரூர் இடையே விரிவுபடுத்தப்படும் சாலைப்பணிக்காக சாலையின் இரு பக்கமும் உள்ள மரங்கள் சரமாரியாக வெட்டி தள்ளப்படுகின்றன. குறிப்பாக, செம்பாக்கம் - காட்டூர் சந்திப்பில் 150 ஆண்டு பழமை மிக்க ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பிரமாண்டமான குடை போல் வளர்ந்து கண்கொள்ளா காட்சியாக உள்ளது. விரைவில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக இந்த ஆலமரம் அகற்றப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று திட்டத்தை அரசு யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Tags : activists ,Road ,community activists , Road, expansion work, 150 years, timber cutting ?, community activists, public
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...