சென்னை: நடிகை ராதிகா சரத்குமார், கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது பெண்கள் மட்டும் கலந்துகொண்டு, கேள்விகளுக்கு பதிலளித்து, ஒரு கோடி ரூபாய் வரை பரிசு பெறும் நிகழ்ச்சி. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, ராதிகா சரத்குமார் கூறியதாவது: கடந்த 40 வருடங்களாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் இருக்கிறேன். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என எல்லா பணிகளையும் செய்திருக்கிறேன். 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராகி இருக்கிறேன். இது பெண்களின் கனவுகளை, சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றும் நிகழ்ச்சி என்பதால் ஒப்புக்கொண்டேன். தொகுப்பாளினியாக பணியாற்றுவது சவாலானது. காரணம், நான் நானாக இருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். அதனால் இந்த சவால் எனக்கு பிடித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.