திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே லாட்டரி விற்பனை செய்தவர்களை கைது செய்ய சென்ற சிறப்பு எஸ்.ஐ.க்களை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ெணய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் பஸ் நிறுத்தம், ஆமூர் நான்கு வழி சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், கோவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி விற்பனை செய்பவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் ஒட்டணந்தல் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (49), தி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரராமன் (47) என்பது தெரியவந்தது. அப்போது, சிறப்பு எஸ்.ஐ.க்களை தாக்கிவிட்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இருவரின் மீதும் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.