×

பாரம்பரிய நெல் பெயரில் தமிழகம் முழுவதும் ஊர்கள்: தொல்லியல் ஆய்வில் தகவல்

மதுரை: தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல்லின் பெயர்களால் ஊர்கள் இருந்த அரிய தகவல்கள், தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும்  அந்தந்த பகுதிகளில் சிறப்பாக இருக்கும் தாவரங்கள், பறவைகள்,  விலங்குகள்,  நில அமைப்புகள்,  நீர் அமைப்புகளை கொண்டு அவ்வூருக்கு பெயரிடுவது சங்ககாலம் முதல் தமிழர் வழக்கமாக இருந்துள்ளது. வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை  மாவட்டங்களில் மழைநீர், ஆற்றுநீரை சேமித்து வைக்கும் கண்மாய்கள், ஏந்தல்கள், குளங்கள், குட்டைகள், ஊருணிகளின் பெயரில் பல ஊர்கள் உருவாகி உள்ளன. இவ்வகையில், பாண்டிய நாட்டின் முக்கிய விளைபொருளாக நெல் இருந்துள்ளது.

இந்த பழமையான நெல்லின் பெயரிலேயே ஊர் பெயர்களும் இருப்பதை ஆய்வுகளால் தொல்லியல் ஆய்வாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவருமான வே. ராஜகுரு கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பல ஊர்கள் நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 72 ஊர்கள் ‘கோட்டை’ என பெயர் பெற்றுள்ளன. கற்கோட்டைகளால் அவ்வூர்களுக்கு இப்பெயர் ஏற்படவில்லை. நெல் விளையும் கோட்டைகள் என்பதால்தான் அப்பெயர் பெற்றன. இத்துடன் சூரன்குறுவை, வாலான், அரியான், கூரன், நரியன், புழுதிக்கார், புழுதிவிரட்டி ஆகிய பாரம்பரிய நெல்லின் பெயராலேயே தமிழகம் முழுதும் ஊர்கள் இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளேன்.

சூரன்குறுவை என்ற நெல் 130 நாட்களில் வளரும் தன்மையுடையது. கரும்பழுப்பு நிறமுடைய இதன் அரிசி, இட்லி, தோசைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்நெல் பல கோட்டைகள் விளைந்ததால் ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களில் சூரன்கோட்டை என்ற பெயரில் ஊர் உருவாகியுள்ளது. இதேபோல் சூரங்காடு, சூரங்குளம், சூரங்குடி என தமிழகம் முழுதும் பல ஊர்கள் உள்ளன. இதேபோல், வாலான் என்ற நெல் உள்ளது. நெல் முனையில் வால் போன்று காணப்படுவதால் ‘வாலான்’ பெயர் பெற்றது. இந்நெல் 160 நாட்களில் வளரக்கூடியது. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன. ராமநாதபுரம் அருகில் வாலாந்தரவை, சாயல்குடி அருகில் வாலம்பட்டி, பரமக்குடி அருகில் வாலான்குடி என இந்நெல்லின் பெயரில் பல ஊர்கள் உருவாகியுள்ளன. மேலும், அரியான் என்ற நெல் உள்ளது. இது 120 நாட்களில் வறட்சியை தாங்கி ஆறரை  அடி உயரம் வரை வளரக்கூடியது. இது கடலோரப்பகுதி, ஆற்றுப்படுகைகளிலுள்ள மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரும். அரியான்கோட்டை, அரியான்வயல், அரியனேந்தல், அரியானூர் என தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட ஊர்கள் ‘அரியான்’ நெல் பெயரில் உள்ளன.    

கூரன் என்னும் பாரம்பரிய நெல்வகை உள்ளது. இந்நெல் தற்போது புழக்கத்தில் இல்லை எனத் தெரிகிறது. சாயல்குடி அருகில் உள்ள கூரன்கோட்டை எனும் ஊர், கூரன் நெல்லின் பெயரால் அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இதேபோல், ‘நரியன்’ என்ற நெல் உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிடப்படுகின்ற பெருநெல் வகையாகும். இதன் பெயரில் நரியனேந்தல், கீழநரியன், நரியம்பட்டி, நரியன்கொல்லை, நரியனேரி, நரியன்கோட்டை, நரியனூர் என 30க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. புழுதிக்கார், புழுதிவிரட்டி என்ற நெல்களும் உள்ளன. 100 நாளில் விளையும் புழுதிவிரட்டி எனும் நெல் ரகம், கடும் வறட்சியிலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை கொண்டு வளரக்கூடியது.

அதேபோல், புழுதிக்கார் எனும் ரகம் மானாவாரி, இறவை பகுதிகளில் செழித்து வளரக்கூடிய, நேரடி நெல் விதைப்பு முறைக்கு ஏற்றது.  சராசரியாக 130 செ.மீ. வளரக்கூடிய, சிவப்பு நிறமுடைய தடித்த நெல் ரகமாகும். இவற்றின் பெயரால் புழுதிக்குளம், புழுதிக்குட்டை, புழுதிப்பட்டி, புழுதியூர், புழுதிக்குடி என பல ஊர்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Towns ,Tamil Nadu , Traditional paddy, all over Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...