பேரையூர்: உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி பணிமனையிலிருந்து ஓட்டை, உடைசலாக இயக்கப்படும் பஸ்களால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் டி.கல்லுப்பட்டி போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. கம்பிகள் ஆங்காங்கே நீட்டி கொண்டிருக்கின்றன. இவைகள் குத்தி கிழிப்பதால் பயணிகளுக்கு ரத்த காயம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஒழுகுவதால் பயணிகள் நனைந்து கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது.
டயர்கள் தேய்ந்து இருப்பதால் கற்கள் குத்தினாலே பஞ்சராகி நடுவழியில் நிற்கின்றன. மேலும் பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்டுகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய பிறகு மீண்டு ஸ்டார்ட் ஆவதில்லை. பயணிகள் இறங்கி தள்ள வேண்டியுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது டிரைவர்கள் இன்ஜினை அணைப்பதில்லை. மாறாக டயர்களுக்கு இடையே கற்களை வைத்து முட்டு கொடுத்து டிரைவர்கள் நிறுத்துகின்றனர். ஓட்டை உடைசலாக உள்ள இந்த பேருந்துகள் தற்போது தள்ளுவண்டிகளாக மாறி வருகின்றன. பஸ்களை மராமத்து செய்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.