அவனியாபுரம்: ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏல விவகாரத்தில், ‘‘சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அங்கிங்கு சில விஷயங்கள் இதுபோல் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிப்பது என்பது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். தேசத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக உள்ள நல்ல விஷயங்களில் மத்திய அரசை ஆதரிப்போம். தமிழகத்திற்கு எதிர்ப்பான விஷயங்களை எதிர்ப்போம்.
இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து, முதல்வர் மத்திய அரசிடம் பேசி முடிவு செய்வார். நாங்கள்தான் உண்மையான அதிமுக. டிடிவி.தினகரன் பின்னால் இருப்பவர்கள் அவரது படத்தை வைத்திருப்பார்கள். அதிமுகவினர் ஜெயலலிதா படத்தை வைத்திருப்பார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் இருக்குமிடத்தில்தான் அதிமுவினர் இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அதிமுகதான் முடிவு செய்யும். அதிமுகவிற்கு அழிவில்லை. அது தோல்வியாக இருந்தாலும் மீண்டும் எழுந்துவிடும்.’’ என்று தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் குறித்து கேட்டபோது, ‘‘சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அங்கிங்கு சில விஷயங்கள் இதுபோல் நடந்துகொண்டிருக்கிறது. தற்பொழுது நடப்பதாக ஊடகங்களின் செய்தி வந்ததை அடுத்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.