சென்னை: ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி தரப்பில் அவரை விடுதலை செய்யக்கோரி ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட 7 பேர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். அவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், சிறையில் உள்ளவர்களின் தரப்பிலும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு உச்ச நீதிமன்றமும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு அரசியல் சாசனம் 161வது பிரிவின் கீழ் முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
இதனால் கடந்த வருடம் தமிழக அரசின் அமைச்சரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 7 பேரை விடுவிக்கக்கோரி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து எந்த முடிவும் இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி தரப்பில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 10 ஆண்டுகளில் சிறையில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு பரிந்துரை செய்த பிறகும் கூட ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். இதனால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.