×

திருவாரூரில் தலா ரூ.10 ஆயிரத்திற்கு இரண்டு சிறுமிகள் விற்கப்பட்ட கொடூரம் : சிறுமிகளின் பாட்டி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் இரண்டு சிறுமிகள் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர்  காளியப்பன். இவருக்கு சங்கீதா வயது 14 மற்றும் கவிதா வயது 13 ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை காளியப்பன் இறந்துவிட்ட நிலையில், அவரது 2 மகள்களும் பாட்டி விஜயலக்ஷ்மி அரவணைப்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி நீடாமங்கலத்தை சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகியோருக்கு சங்கீதா மற்றும் கவிதாவை அவரது பாட்டி விஜயலட்சுமி ரூ. 10000த்திற்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.   

இது குறித்து குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து குடவாசல் காவல்துறை, கனகம், சகுந்தலா மற்றும் அவரது கணவர்கள் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பாட்டி விஜயலக்ஷ்மி சிறுமிகளை பணத்திற்காக விற்றது அம்பலமானது. மேலும் விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட கனகம், சகுந்தலா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கோவை பின்னலாடை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சிறுமிகளை மீட்க போலீசார் விரைந்துள்ளனர்.


Tags : girls ,grandmothers ,Tiruvarur , Kudavasal, Thiruvarur, girls, knitwear, charge, sales
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...