நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பம்பட்டி ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (50). இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் குமரன் (12). 7ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வாரம் காய்ச்சலுக்காக நாமகிரிப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனையில் குமரனுக்கு தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் குமரன் இறந்தான். இதையடுத்து நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ குழுவினர், அந்த கிராமத்தில் முகாமிட்டு வீடுகளில் தண்ணீர், உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.