சென்னை: ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்தவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அனைத்து மாநிலங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகம் காரணமாக தமிழ்நாடு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனால், அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எந்த சூழல்களிலும் அனுமதிக்க கூடாது. இதுதான் எங்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதனை மத்திய அரசு ஏற்று, அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் வரும் 17ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்டவை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.