விருதுநகர்: விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருநங்கை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் அருகே சின்னபேராலியைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி (65). திருநங்கை. விவசாய கூலித்தொழிலாளி. இவர், பெரியபேராலி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக கிராம மக்களுடன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதுகுறித்து திருநங்கை அழகு பட்டாணி கூறுகையில், ‘‘நான் கூலி வேலை செய்து வருகிறேன். என் மீது கிராம மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்.
கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பதவிக்கு போட்டியிட சம்மதித்தேன். மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றால் மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகளை செய்து தருவேன். கடந்த முறை தேர்தல் அறிவித்தபோது, பெரியபேராலி ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தேன்’’ என்றார்.