வதோதராவில் மும்பை அணியுடன் நடைபெறும் எலைட், பி பிரிவு லீக் ஆட்டத்தில் பரோடா அணிக்கு 534 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த மும்பை முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது (பிரித்வி ஷா 66, ரகானே 79, முலானி 89, ஷர்துல் தாகூர் 64). பரோடா முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (தேவ்தர் 160, சோலங்கி 48). மும்பை பந்துவீச்சில் முலானி 6 விக்கெட் கைப்பற்றினார்.
124 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, 3ம் நாளான நேற்று 4 விக்கெட் இழப்புக்கு 409 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 202 ரன் (179 பந்து, 19 பவுண்டரி, 7 சிக்சர்), பிஸ்டா 68, கேப்டன் சூரியகுமார் யாதவ் 102* ரன் விளாசினர். இதையடுத்து, 534 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பரோடா அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்துள்ளது. கை வசம் 7 விக்கெட் இருக்க, பரோடா அணி வெற்றிக்கு இன்னும் 460 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.