கிருஷ்ணகிரி, டிச.12: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் சாக்கடை கால்வாயை, பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில், டாக்டர் அம்பேத்கர் நகர் மற்றும் ஈபிஎஸ் நகர் பகுதிகளில் 3 இடங்களில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ₹3 லட்சம் மதிப்பில் சிறு பாலங்கள் கட்டப்பட்டது. இந்த பாலங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காவேரிப்பட்டணத்தில் நேற்று நடந்தது. இதில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் பங்கேற்று, பாலங்களை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘வரும் 2020ல் ரஜினிகாந்த் கட்சியை தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார். 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும். 2021 தேர்தலில் ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்,’ என்றார்.