சென்னை: இளநிலை பொறியியல் பட்டப்படிப்புடன் பிஎட் பட்டம் பெற்றவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரை கணக்கு பாடம் கற்பிக்க தகுதியுடையவர்கள் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் குறிப்பிட்ட சில பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்று, பிஎட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், பட்டப் படிப்புகளுக்கு சமதகுதி குறித்து ஆய்வு செய்யும் குழுவின் (Equivalence) கூட்டம் கடந்த நவம்பர் 6 மற்றும் 12ம் தேதிகளில் நடந்தது. அந்த கூட்டத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் பட்டப் படிப்புகளுக்கு இணையான பட்டப் படிப்புகள் மற்றும் இணையில்லாதவற்றையும் பட்டியலிட்டுள்ளது. அந்த பட்டியலை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துக்கு இணைக்குழு அனுப்பி வைத்தது. அந்த பட்டியலில் தெரிவித்துள்ளபடி உயர்கல்வித்துறையின் சார்பில் பட்டப் படிப்புகளுக்கு இணையான பட்டப்படிப்புகளை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றி இணைத் தன்மை வழங்கியுள்ளது. அந்த தீர்மானங்களை அரசு கவனமுடன் படித்து பரிசீலித்து மேற்கண்ட பட்டப் படிப்புகள் இணைத் தன்ைமயை ஏற்று அரசாணையாகவும் வெளியிட்டுள்ளது.இந்த அரசாணையை உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம்சர்மா வெளியிட்டுள்ளார். இணைக் குழுவின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள பட்டப் படிப்புகளில் குறிப்பிட்ட சில பட்டப் படிப்புகள் இணையானது என்று அரசு ஏற்று ஆணையிடுகிறது. உயர்கல்வித்துறை நிறைவேற்றியுள்ள தீர்மானங்களில் 20வது தீர்மானத்தில் ‘‘இளநிலை பொறியியல் படிப்பில் எந்த பிரிவில் படித்து பட்டம் பெற்றிருந்தாலும், அவர்கள் பிஎட் பட்டம் பெற்றிருந்தால் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணக்கு பாடத்தை கற்பிக்க தகுதியானவர்கள்’’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பொறியியல் படிப்பில் எந்த பிரிவில் படித்து பட்டம் பெற்றிருந்தாலும், அவர்கள் பிஎட் பட்டம் பெற்றிருந்தால் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கணக்கு பாடம் நடத்தலாம்