சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய 30 பொதுச் சின்னங்களை மாநில தேர்தல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு 30 பொது சின்னங்களை ஒதுக்கீடு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், பதக்கம், கோட்ைட, கேரம்போர்டு, கணிப்பொறி, மேசை மின்விசிறி, சீத்தாபழம், பேருந்து, பூந்தொட்டி உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி 27 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் முதன்மை தேர்தல் அலுவலர் ஆனந்தராஜ் உள்ளிட்ட ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் வேட்புமனு தாக்கலுக்கு தேவையான படிவங்களை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கல் தொடர்பான தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.