×

கர்நாடகா 336 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெறுமா தமிழகம்?

திண்டுக்கல்: கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை ‘எலைட்’ பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழகம் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்), டாசில் வென்று பேட் செய்த கர்நாடகா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்தது. மயாங்க் அகர்வால் 43 ரன், தேவ்தத் படிக்கல் 78 ரன், தேஷ்பாண்டே 65 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் கோபால் (35 ரன்), டேவிட் மத்தியாஸ் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.கோபால் மேற்கொண்டு ரன் எடுக்காமல் விக்னேஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் வசம் பிடிபட்டார். இதையடுத்து மத்தியாஸ் - கே.கவுதம் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. மத்தியாஸ் 26 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோனித் மோரே முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய கே.கவுதம் அரை சதம் அடித்தார்.

அவர் 51 ரன் எடுத்து (39 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) அஷ்வின் சுழலில் விஜய் வசம் பிடிபட, கர்நாடகா முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (110.4 ஓவர்). தமிழக பந்துவீச்சில் ஆர்.அஷ்வின் 4, சித்தார்த், கே.விக்னேஷ் தலா 2, அபராஜித் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து தமிழக அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபினவ் முகுந்த் - முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24 ஓவரில் 81 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. முரளி விஜய் 32 ரன், முகுந்த் 47 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.கேப்டன் விஜய் ஷங்கர் 12, பாபா அபராஜித் 37 ரன்னில் பெவிலியன் திரும்பினர். தமிழக அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 23 ரன், ஜெகதீசன் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, தமிழக அணி இன்னும் 171 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பரோடா 301/9
பரோடா அணியுடன் வதோதராவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 431 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிரித்வி ஷா 66, ரகானே 79, ஷர்துல் தாகூர் 64, முலானி 89, அட்டார்டே 22 ரன் எடுத்தனர். பரோடா பந்துவீச்சில் பார்கவ் பட், யூசுப் பதான் தலா 3, அபிமன்யுசிங் ராஜ்புத் 2, சொபாரியா, குருணல் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பரோடா 2ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 301 ரன் எடுத்துள்ளது. விஷ்ணு சோலங்கி 48, தீபக் ஹூடா 24, விராஜ் போசலே 27, பார்கவ் பட் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் கேதார் தேவ்தர் 154 ரன், சொபாரியா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். மும்பை பந்துவீச்சில் முலானி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.


Tags : Karnataka 336 ,Karnataka ,Tamil Nadu , Karnataka, Tamil Nadu
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...