×

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் நிழற்குடையில் மீண்டும் புதிய கல்வெட்டு: நீக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரி பெயர்களும் இடம்பிடித்தது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நிழற்குடையில் இருந்த கல்வெட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டு அதில் பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் பெயர்களுடன் மீண்டும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்புகளை இடமாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பஸ் ஸ்டாப் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பழமை வாய்ந்த காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு ரூ.5 லட்சம் புதிய பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. இதனையொட்டி இது தொடர்பாக கல்வெட்டு ஒன்றும் அமைக்கப்பட்டது.அதில் நாகர்கோவில் மாநகராட்சி 100 ஆண்டு நினைவு பயணிகள் நிழற்குடை எனவும், துவக்க தேதி 1.1.2020 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுஜின் ஆகியோரது பெயர்கள் மட்டும் இடம்பெற்றிருந்தது. அடுத்த ஆண்டின் தேதியில் கல்வெட்டு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதிகாரிகள் பெயரில் இருந்த கல்வெட்டு திடீரென்று இரவோடு இரவாக திடீரென்று அகற்றப்பட்டது. மேலும் கல்வெட்டு இருந்த இடத்தில் புதிதாக பிளக்ஸ் பேனர் ஒன்றை அதிகாரிகள் ஒட்டி வைத்தனர்.

அதில், ‘நாகர்கோவில் மாநகராட்சி நூற்றாண்டுவிழா நினைவு பேருந்து நிறுத்தம். நாகர்கோவில் நகராட்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1919ம் ஆண்டு நகராட்சியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு தாய் தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டபோது நாகர்கோவில் நகராட்சி தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறையின் கீழ் செயல்பட தொடங்கியது. 1969ல் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் நூற்றாண்டுவிழா கண்ட நகராட்சி 2019ம் ஆண்டு மார்ச் முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், பொறியாளர் என்று பொறுப்புகள் மட்டும் குறிப்பிடப்பட்டு நகராட்சியின் வரலாறு சுருக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த பிளக்ஸ் பேனரில் இருந்த தகவல்கள் கல்வெட்டாக மாற்றப்பட்டு நேற்று இரவு நிழற்குடையில் மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது. ஆணையர், பொறியாளருக்கு பொறுப்புகள் மட்டுமே பிளக்சில் இடம்பெற்றிருந்த நிலையில் மீண்டும் ஆணையர் சரவணகுமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன் என்ற பெயர்கள் கூடுதலாக கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. கலெக்டர் பெயர், மற்றுமொரு பொறியாளர் பெயர், ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது போன்ற விபரங்கள் தற்போது இடம்பெறவில்லை. பஸ் நிலையத்தில் தினசரி ஒருவித கல்வெட்டு அமைக்கப்பட்டு வருவது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Collector ,bus stop ,Nagercoil ,Corporation , Collector, bus stop , Nagercoil, Corporation Officer, names
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...