×

சினிமா தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணாநகர்: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘‘வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது விரைவில் வெடிக்கும்,’’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே, இதுபற்றி வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை செய்தனர்.

இதனால், திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தியேட்டரை விட்டு வெளியில் வந்தனர். திரையரங்கம் முழுவதும் தேடியும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிந்தது. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய நபரின் எண்ணை வைத்து விசாரித்தபோது, ஆந்திராவை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அந்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : movie theater , Bomb threat , movie theater
× RELATED கர்ணன் படம் திரையிட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு