×

சிபிஎஸ்இ உள்ளிட்டவற்றில் படித்தவர்கள் பிளஸ்2 தேர்வு எழுதலாம்: அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ உள்ளிட்ட மற்ற பாடத்திட்டத்தில் பிளஸ் 1 எழுதிய மாணவர்கள் தமிழக மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-18ம் ஆண்டில் தமிழக  பாடத்திட்டம், பிற மாநிலப் பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஆகியவற்றின் கீழ் படித்து பிளஸ்1 தேர்ச்சி பெற்றவர்கள், தமிழக பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பில் சேர்ந்து படிக்கும் நிலையில் அவர்கள் பிளஸ்2 தேர்வு எழுத அனுமதிக்கலாம்  என்று அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2018-19ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழக பாடத்திட்டம், சிபிஎஸ்இ  பாடத்திட்டம் மற்றும் பிற மாநில பாடத்திட்டம் ஆகியவற்றின் கீழ் பிளஸ் 1 வகுப்பை படித்து தேர்ச்சி பெற்ற 12 மாணவர்கள், தங்களின் குடும்ப சூழல் காரணமாக, மேற்கொண்டு அதே பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்2 வகுப்பை தொடர  முடியாமல் தமிழக பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

தமிழக அரசுத் தேர்வுகள் துறையில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி மேற்கண்ட மாணவர்களை மீண்டும் பிளஸ்1 தேர்வு எழுத வேண்டி வரும். அப்படி செய்தால் அந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அதனால் இந்த  மாணவர்கள் பிளஸ்1 தேர்வு எழுதாமல் பிளஸ்2 தேர்வை மட்டுமே  எழுத அனுமதிக்க அரசு ஆணையிட வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் பரிந்துரையின்  பேரிலும், அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தில் தெரிவித்துள்ள கருத்துகளை அரசு ஏற்று, தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டுக்கு முன்பு உள்ள தமிழக பாடத்திட்டத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்று,

தற்போது தமிழக பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் 12 மாணவர்கள், பிளஸ் 1 தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து சில விதிகளை பின்பற்றி தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வை மட்டுமே எழுத அனுமதிக்க அரசுத் தேர்வுகள்  இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இதன்படி,

* சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்று தற்ேபாது தமிழக பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் படித்த பாடத்தொகுப்பில் பிளஸ் 2 தேர்வு எழுதலாம்.
* 2017-18ம் கல்வி ஆண்டுக்கு முன்பு தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதே பாடத் தொகுப்பில் பிளஸ்2 தேர்வு எழுதலாம்.
* மேற்கண்டபடி பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிளஸ்2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் மட்டுமே வழங்கப்படும்.
* நேரடித் தனித் தேர்வர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags : educators ,CBSE , CBSE Plus 2 Exam, Allow
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...