கடலூர்: வெங்காய விலை உயர்வு எதிரொலியாக கடலூர் திருமண விழாவில் திருமண ஜோடிக்கு நண்பர்கள் வெங்காய பொக்கேவை பரிசாக அளித்து அசத்தினர்.நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணை முட்டி வருவதால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயம் சாமானிய மக்கள் உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறு உணவகம் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வெங்காய விலை ஏற்றத்தால் வெங்காயத்தை பயன்படுத்தி செய்யப்படும் பல்வேறு உணவு வகைகள் மாற்றம் கண்டுள்ளது. சராசரியாக ரகத்துக்கு ஏற்ற வகையில் கிலோ ரூ.120 முதல் ரூ.180 வரை கடலூரில் வெங்காயத்தின் விலை விற்கப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்கள் சப்ரீனா- ஷாகுல்க்கு அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து வெங்காயத்தை பரிசாக அளித்தனர். வழக்கமாக திருமண விழாவில் பூச்செண்டு, பரிசுப் பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்படும் நிலையில் வெங்காயத்தின் கடுமையான விலை உயர்வால் அதிர்ந்து போய் நாட்டு மக்களின் நிலையை எடுத்துரைக்கும் வகையில் கடலூர் திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காய பொக்கேவை பரிசாக வழங்கியதாக மணமக்களின் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் மணமக்களுக்காக செய்யப்பட்ட பொக்கே ரூ.600 ஆகியது. எனவே இதுவும் விலை உயர்ந்த பரிசுப் பொருள் தான் என குறிப்பிட்டனர். இதனை திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள், திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் என அனைவரும் வியந்து பார்த்தனர்.