திருவொற்றியூர்: வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளிலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணி நடக்கும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியது.ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் தற்போது பெய்த மழையில் மிகவும் மோசமாகி உள்ளது. இதனால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பைக்கில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் சாலை பள்ளத்தில் விழுந்து காயமடைந்துள்ளனர்.
இதுபோல் மணலி கொசப்பூர், எம்எப்எல் சந்திப்பு, 200 அடி சாலை சந்திப்பு ஆகிய பகுதியில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும் காமராஜர் சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளன. மாதவரம் நெடுஞ்சாலை புத்துக்கோயில் தெரு அருகேயும் சாலை பழுதடைந்துள்ளது. எனவே, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.