மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே முள்ளிமலைகண்டியில் சில தினங்களுக்கு முன் அரசு பள்ளி ஜன்னலை உடைத்து கரடி உள்ளே சென்றது. அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி சிதறடித்ததுடன், அரிசி, சமையல் எண்ணெய் ஆகியவற்றையும் தூக்கி சென்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மஞ்சூர் ஐயப்பன் கோயில் மதில் சுவர் மீது ஏறி உள்ளே நுழைந்த கரடி அங்கிருந்த விநாயகர் சிலையின் மீது அமர்ந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு சத்தம் போடவே கரடி அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. இதை தொடர்ந்து நள்ளிரவு முள்ளிமலைகண்டிக்கு சென்ற கரடி ஏற்கனவே கைவரிசை காட்டிய அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு சமையலுக்கு வைத்திருந்த பொருட்களை கீழே வாரியிறைத்து சென்றுள்ளது.