சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு விளைநிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. பத்திர பதிவு மூலம் வருவாய் குறைந்ததை அடுத்து கடந்த 2017ல் 30 சதவீதம் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் முறையும் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக பத்திரப் பதிவுத்துறையில் கடந்தாண்டு ₹11 ஆயிரம் கோடி வருவாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு ₹13,123 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பதிவுத்துறை ஐஜி ஜோதிநிர்மலாசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓவ்வொரு மண்டலத்திலும் வருவாய் குறைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது உயர் மதிப்புள்ள ஆவணங்கள் பதிவு செய்வதே குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் உயர் மதிப்புள்ள ஆவணங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். இந்த ஆவணங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவாய் வசூலினை உயர்த்த வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வருவாய் வசூலினை காரணம் காட்டி சார்பதிவாளர்கள் உயர்மதிப்புள்ள ஆவணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறைவான மதிப்புள்ள ஆவணங்களை பதிவு ெசய்ய தாமதம் செய்ய வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.