சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: கடந்த கால மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து இந்திய பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழும் வணிகம், விவசாயம், உற்பத்தி எனும் பொருளாதார தூண்களை சிதைத்து அச்சுறுத்தப்பட்டு தேச மக்கள் துரிதமாக வறுமைகோட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தேசிய ஜிடிபி எனும் பொருளாதார குறியீடு 7.8ல் இருந்து 4.6 சதவீதமாக கடந்த காலாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வணிகம் நொடிந்து போயுள்ள தருணத்தில் மீண்டும் ஜிஎஸ்டி வரியில் சீரமைப்பு எனும் நோக்கத்துடன் மத்திய அரசு வரி உயர்வை அறிவித்திருப்பது வணிகர்களுக்கும், தேசத்திற்கும் இழைக்கப்படும் அநீதியாகும். தேசத்தின் வரிவிதிப்பு என்பது 5 சதவீதம் 12 சதவீதம் என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.மக்களின் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல, மக்கள் இனியொரு வரி உயர்வென்றால் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் காரணம் உற்பத்தியிழப்பும், வேலை வாய்ப்பின்மையும் தான். அவர்களோடு சேர்ந்து நாங்களும் வீதியில் இறங்கி போராடவும் தயார்.