சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்த பெரிய மய்யத்தின் குழு கூட்டமாக பெருகி, இன்று மக்கள் சக்தியாக மாறிவிட்டது. இதுவே நமது நேற்றைய விமர்சகர்களை, இன்றைய ஆதரவாளர்களாக மாற்றி இருக்கிறது என்பது இனிய உண்மை. நம்மை பற்றி ஹாஸ்யமும், ஹேஸ்யமும், ஜோசியமும் பேசியவர்கள், இன்று நம் நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள்.
தமிழ்நாட்டில் நிகழ இருக்கும் உள்ளாட்சி தேர்தல், முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சி தேர்தலில் மநீம பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது.மாற்றத்தை லட்சியமாக கொண்டுள்ள மநீம, அதை தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில் எந்த சாதனையும் இல்லை.
மநீம வெற்றிக்கான வித்து சாதுர்யமோ, பண பலமோ அல்ல. நேர்மையும், மக்கள் பலமுமே ஆகும். இந்த தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறப் போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப்படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சி தேர்தல் இருக்கப் போவதில்லை. எனவே மநீம கட்சியினர், ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும். இதுவே என் ஆசையும், அறிவுரையும் ஆகும்.வரும் 50 வாரங்களில் மக்கள் நலம் பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப் போகும் நம் வெற்றிக்கொடியே தமிழகத்தின் அன்னக்கொடியும் ஆகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 2021 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.