புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இடிந்து விழும் ஆபத்தான கட்டிடங்களுக்கு இடையே அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. ஆபத்தான கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் அரசு உயர் தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பிற்கு ஸ்மாட் கிளாஸ் வகுப்பறைகள் உள்ளன. இந்த பள்ளி வளாகத்தில் வட்டார வளமையம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மையம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் போன்றவை இருந்தன. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கட்டிடம் 100 ஆண்கள் பழைமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும், கட்டிடத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்த நிலையில் இருந்ததால், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் வேறு இடத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது.
இதேபோல பள்ளி வளாகத்தில் வட்டார வளமையத்தின் அருகே கார்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து, அவ்வப்போது கட்டிடத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அரசு உயர் துவக்கப்பள்ளி ஆபத்தான கட்டிடங்களுக்கு இடையே செயல்பட்டு வருகின்றது. இதேபோல பள்ளியின் சமையறை அருகே உள்ள ஒரு வகுப்பறை கட்டிடம் பாதி இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து பலமுறை மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிகாரிடம் முறையீட்டும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் விளையாடும் போது ஆபத்தான கட்டிடங்களுக்கு அருகே சென்று விளையாடுகின்றார்களா? என அவ்வப்போது பார்த்து கொண்டே இருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.