×

கோவையில் டெங்குவுக்கு ஒரே நாளில் 2 குழந்தைகள் பலி

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 43 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 114 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகள் ஜெசிந்தா மேரி (5). இவருக்கு காய்ச்சல் இருந்ததால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜெசிந்தா மேரியை கடந்த 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல திருப்பூர் அருகே நாச்சிபாளையம் திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் தர்ணிஷ்(8). காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 4ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : kovai ,children ,kovil , Coimbatore, Dengue, 2 children killed
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...