மூணாறு : மூணாறு அருகே பொன்முடி அணையில் சுற்றுலாப்பயணிகளை கவர படகு சவாரி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா துவங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் மாட்டுப்பட்டி அணைக்கு அடுத்தபடியாக சுற்றுலாப்பயணிகள் அதிகம் பார்வையிடும் இடம் பொன்முடி அணையாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அணையின் அழகை ரசிக்க வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக, சுற்றுலாத்துறையில் பின்தங்கியிருந்த பொன்முடி அணை தற்பொழுது மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இந்த டிசம்பர் மாதம் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என்ற நிலையில், பொன்முடி அணையில் ராஜக்காடு கூட்டுறவு வங்கி மற்றும் ஹைடல் சுற்றுலாத்துறை சேர்ந்து சுற்றுலாப்பயணிகளுக்காக படகு சவாரி மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு பூங்கா போன்றவற்றை அமைத்துள்ளன. இரண்டு படகுகள் மட்டும் இருந்த நிலையில் தற்போது புதிய விரைவு படகுகள் மற்றும் சைக்கிளிங் படகு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.