பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு நிறைவடைந்தது.
பாஜ அரசு பதவியேப்பு:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜவினர் எத்தனையோ வழிகளில் முயன்றாலும் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் மனதை மாற்றினர். அதன் பயனாக ஆர்.ரோஷன்பெய்க், எஸ்.டி சோமசேகர், கே.கோபாலய்யா, ஆனந்த்சிங், எம்டிபி நாகராஜ், பைரதி பசவராஜ், வி.முனிரத்னம், ரமேஷ்ஜாரகிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, பி.சி.பாட்டீல், எச்.விஷ்வநாத், கே.ஆர்.நாராயணகவுடா, பிரதாப்கவுடா பாட்டீல், சீமந்தபாட்டீல், டாக்டர் கே.சுதாகர், ஆர்.சங்கர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ அரசு பதவியேற்றது.
15 தொகுதிகளுக்கு தேர்தல்:
இதனிடையில் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் மஸ்கி ஆகிய இரு தொகுிதிகள் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிவில் 66.25 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜ சார்பில் தலா 15, மஜத சார்பில் 12, தேசியவாத காங்கிரஸ் சார்பில் 1, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 45, சுயேட்சைகள் 75 என மொத்தம் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜ ஆட்சி தொடருமா?
முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி தொடருமா? இல்லை என்பது 15 தொகுதிகளில் இன்று பதிவாகியுள்ள வாக்காளர்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. நடைபெற்ற 15 தொகுதி இடைத்தேர்தலில் 6 தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக அரசு தொடர்ந்து நீடிக்க முடியும். பாஜக 7 இடங்களை வென்றால், கர்நாடக சட்டசபையில் பாஜக பெரும்பான்மை அடையாளத்தை காண்பிக்கும். இடைத்தேர்தல்களில் 6 இடங்களை கூட வெல்ல பாஜக தவறினால், கர்நாடகாவில் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐ.என்.சி மற்றும் ஜே.டி.(எஸ்) எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி பெங்களூருவில் மூன்று இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 11 மையங்களில் எண்ணப்படுகிறது. மின்னனு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அன்று பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.