சென்னை: ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை மிக அதிக எண்ணிக்கையில் ஊர்வலமாக செல்ல உள்ளனர். இதனை முன்னிட்டு காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் சூழ்நிலைக்கு தக்கவாறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அப்போது கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பப்பட்டு கொடிமரச்சாலை, அண்ணா சாலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம்.
முத்துசாமி பாயின்டில் இருந்து வரும் வாகனங்கள் கொடிமரச் சாலைக்கு செல்ல அனுமதிக்காமல் அண்ணா சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம். நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் பாயின்டில் திருப்பப்பட்டு சுவாமி சிவானந்த சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம் தெற்கில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம். விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு பாரதி சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம். அண்ணா சாலையில் வரும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை ஆகியவற்றில் செல்ல அனுமதிக்காமல் நேருக்கு நேராக அண்ணா சாலையில் சென்று தங்களது இலக்கினை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.