கொல்கத்தா: வெங்காயத்தின் விலை கிலோ 150ஐ எட்டியுள்ளதால், வெளிநாட்டில் இருந்து 800 டன் வெங்காயத்தை மேற்குவங்க மாநில அரசு இறக்குமதி செய்கிறது.நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. மழை காரணமாக விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது, பயிரிடும் நிலப்பரப்பு குறைந்து என்று பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, சென்னையிலேயே ஒரு கிலோ தரமான வெங்காயத்தின் விலை 150-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், மேற்கு வங்க மாநிலத்திலும் ஒரு கிலோ வெங்காயம் 150க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி அம்மாநில அரசு, வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயத்தை 88க்கு வாங்கி, நியாய விலைக்கடைகள் மற்றும் நடமாடும் நியாய விலைக்கடைகள் மூலம் 65க்கு விற்று வருகிறது.
இந்நிலையில், எகிப்தில் இருந்து வாரத்துக்கு 200 டன் என்ற அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்து, அதை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ‘இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு’ (நபெட்) என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் இந்த வெங்காயத்தை எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.எகிப்தில் இருந்து அனைத்து விலைகளும் உள்பட மும்பையில் கொண்டு வந்து இறக்கப்பட்டு ஒரு கிலோ 55 என்ற விலையில், ஒப்படைக்கப்படும். மும்பையில் இருந்து மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு இந்த வெங்காயம் கொண்டு வரப்படும்போது, போக்குவரத்து செலவு சேர்த்து ஒரு கிலோ 65க்கு ஒப்படைக்கப்படும். இதை நியாய விலைக்கடைகள் மூலம் விற்க, மேற்குவங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.