மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னதி அருகே உள்ள கொடி மரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திருக்கார்த்திகை விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் நடராஜன், கோயில் ஊழியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கார்த்திகை விழா நாட்களில் 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் உற்சவம் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதியில் புறப்பாடாகி வலம் வரும். டிச.10ம் தேதி திருகார்த்திகை அன்று கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 7 மணியவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி தேரடி பூக்கடை தெருவிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியின் போது எழுந்தருள உள்ளனர். விழா நாட்களில் கோயிலில் தங்க ரத உலா மற்றும் திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் நடைபெறாது என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

