புதுடெல்லி: ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்றவர்களை தூக்கில் போட வலியுறுத்தி டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். டெல்லி ராஜ்காட்டில் தனது உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் இவர் பெண்களுக்கு எதிரான நெருக்கடி நிலை நாட்டில் நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி ஐதராபாத்தில் பெண் மருத்துவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அவரை சீரழித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதும், 6 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்பதும் பெண்கள் ஆணைய தலைவலி சுவாதி மாலிவாலின் கோரிக்கையாகும். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இந்த தேசமானது மிகவும் மோசமான நாடக மாறி வருகிறது. பெண்களுக்கு எதிராக நாட்டில் நெருக்கடி நிலை நிலவி வருகிறது.
இந்தியாவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு இந்த அரசு எவ்வித தண்டனையும் வாங்கி தருவதில்லை. ஐதராபாத் பெண் மருத்துவர் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தாம் உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாகும் சுவாதி மாலிவால் உறுதிபட தெரிவித்துள்ளார்.