திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கொள்ளையன் சுரேஷ் தற்போது போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கே.கே. நகர் பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கொள்ளையன் சுரேஷ், திருவாரூர் போலீஸ் பற்றி செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில் திருவாரூர் போலீசார் தன்னை கைது செய்த போது தன்னிடம் இருந்து சுமார் 5 கிலோ 700 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். ஆனால் கணக்கு காட்டியபோது 4 கிலோ 700 கிராம் நகைகளையே கைப்பற்றியதாக குறைத்துக் காட்டியுள்ளது. ஆகவே தன்னிடம் இருந்து கைப்பற்றிய தங்கநகைகளில் ஒருகிலோ தங்கத்தை திருவாரூர் போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆகவே தற்போது 1 கிலோ தங்க நகையானது திருவாரூர் போலீசாரிடமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம் நீதிமன்றத்தில் தெரிவித்தாலோ அல்லது மற்றவர்களிடம் தெரிவித்தாலோ தன்னுடைய குடும்பத்தினரை காவல்துறையினர் தொந்தரவு செய்வதாக தெரிவித்தனர்.
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கானது ஆரம்பம் முதலே பல்வேறு கட்ட தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக காவல்துறையினர் அளித்திருந்தனர். இந்நிலையில் கொள்ளையன் சுரேஷ் காவல்துறை மீது குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலிதா ஜுவல்லரி வழக்கில் சுரேஷினை கைது செய்த பிறகு திருச்சியில் 16 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது. எங்கெல்லாம் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதோ அந்த வழக்குகள் அனைத்திலும் சுரேஷை சம்பந்தப்படுத்தி அவர் மீது வழக்கு பதியப்படுவதாகவும், தொடர்ந்து சுரேஷ் மீது திருச்சி போலீசார் பொய் வழக்கு பதிவதாகவும் அவருடைய வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திருவாரூர் போலீசாரிடம் 1 கிலோ தங்க நகை இருப்பதாக வைத்து கொண்டால் இன்னும் மூன்றரை கிலோ தங்க நகையானது எங்கு உள்ளது?. இதில் யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? போன்ற பல்வேறு கேள்வியானது தற்போது எழுந்துள்ளது.