×

சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு தருமாறு பிந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு

டெல்லி: சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு தருமாறு சமூக செயற்பாட்டாளர் பிந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்கு செல்ல காலம் காலமாகத் தடை இருந்து வருகிறது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018, செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடைவிதிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பிந்து அம்மிணி. இந்நிலையில் இந்தத் தீர்ப்பையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலை செல்வதற்காக திருப்தி தேசாய் கொச்சி வந்தபோது அவரை சந்திக்க சென்ற பிந்து அம்மிணி மீது ஒருவர் மிளகு ஸ்பிரேயை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பிந்து அம்மிணி கூறுகையில், இளம் பெண்களை சபரிமலை செல்ல அனுமதிக்க மறுக்கும் போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு தருமாறு சமூக செயற்பாட்டாளர் பிந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் கடந்த வாரம் சபரிமலை செல்ல முயன்ற போது தாம் தாக்கப்பட்டதாக பிந்து புகார் தெரிவித்துள்ளார். சபரிமலை செல்லும் பெற்றோருக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார். பிந்து மனு மீது அடுத்த வாரம் முதல் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Supreme Court ,Bindu ,Court , Case in Sabarimala, Bindu, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...