செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவை எட்ட உள்ளன நிலையில், கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, தனது முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்று காலை நிலவரப்படி மதுராந்தகம் ஏரி நீரின் கொள்ளளவு 22.4 அடியாக உயர்ந்துள்ளது. ஏரி தனது முழுகொள்ளளவை எட்டிய பிறகு, உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். ஏரியின் நீர்மட்டம் உயரும் போது அதனருகே உள்ள தானியங்கி மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
கிளையாறு வழியாக வெளியேற்றப்படும் நீரானது, முன்னுத்திக்குப்பம், முருக்கஞ்சேரி, கட்டுச்சேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 18 கிராமங்கள் வழியாக சென்று பாலாற்றில் அந்த நீர் கலக்கப்படுகிறது. இந்த நிலையில், வெளியேற்றப்படும் உபரிநீரால் 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மதுராந்தகம் ஏரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஏரி அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நேற்று தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் பேரிடர் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுராந்தகம் ஏரியை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.