திருமலை: ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு பூரண மது விலக்கை அமல்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கிராம பகுதிகளில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 43 ஆயிரம் பெட்டிக் கடைகள் மூடப்பட்டன. மேலும், 4,380 மதுக்கடைகள் இருந்த நிலையில் அவற்றை 20 சதவீதமாக குறைத்து, 3,500 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மேலும், மது விற்பனை நேரத்தையும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் விதமாக செய்யப்பட்டுள்ளது. பார் லைசென்சும் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 2018 நவம்பர் வரையில், 29.62 லட்சம் பெட்டி மதுபாட்டில் விற்பனை செய்த நிலையில், இந்தாண்டு நவம்பரில் 22.31 லட்சம் பெட்டி மதுபாட்டில் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு 17.80 லட்சம் பீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 8.13 லட்சம் பெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசின்லாபத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.