×

குடும்ப தகராறில் விபரீதம் கொதிக்கும் எண்ணெயை எடுத்து கணவன் மீது ஊற்றிய பெண் கைது : திருவிக நகரில் பரபரப்பு

பெரம்பூர்: திருவிக நகர், கிருஷ்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் உபயத்துல்லா (37). பாரிமுனையில் செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு  அதிகமாகி அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த நஸ்ரின் அடுப்பில் சூடாக கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து உபயத்துல்லா மீது ஊற்றினார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவரது உடல் முழுவதும் வெந்த நிலையில்  துடிதுடித்து கொண்டிருந்தார். நஸ்ரின் உடனடியாக அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.

படுகாயம் அடைந்த உபயத்துல்லாயை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவிக நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி நஸ்ரினை தேடிவந்தார். இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள தந்தை வீட்டில் இருந்த நஸ்ரினை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதால் தற்போது உபயத்துல்லா உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் ஒருவர் மீது மற்றொருவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் இந்த விபரீத சம்பவம் ஏற்பட்டு அதனால் மனைவி ஆத்திரமடைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார், என தெரியவந்தது.

Tags : boiling oil ,Family dispute ,arrest , Woman arrested , pouring boiling oil ,husband in family dispute
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...