×

சார்ஜா, இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 15.2 லட்சம் தங்கம் பறிமுதல் : 2 பேர் பிடிபட்டனர்

சென்னை: சார்ஜா, இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 15.2 லட்சம் மதிப்புடைய தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 8 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கடலூரை சேர்ந்த பார்த்திபன் (22) என்பவர் சுற்றுலா பயணியாக சார்ஜா சென்று, இந்த விமானத்தில் சென்னை திரும்பினார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. பின்பு அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தனர். அப்போது, அவருடைய உள்ளாடைக்குள் 190 கிராம் கொண்ட தங்க செயின்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 7.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

அதேபோல் இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த ஜபருல்லாகான் (35) என்பவர், இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்று, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார். அவருடைய உடமைகளை சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர்.  அப்போது அவரது ஆசனவாய்க்குள் மறைத்து வைத்திருந்த சிறிய பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 195 கிராம் தங்க கட்டிகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 7.7 லட்சம். இதையடுத்து அவரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 15.2 லட்சம் மதிப்புடைய 385 கிராம் தங்கத்தை அதிகாரிகள்  பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sharjah ,Sri Lanka , 15.2 lakh gold seized , Sharjah, Sri Lanka
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!