சென்னை: சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட தொன்மையான பல சிலைகளை மீட்டு வந்தார். இவரது காலநீட்டிப்பு காலமானது கடந்த மாதம் 30ம் தேதியோடு நிறைவடைந்ததை அடுத்து, அவர் விசாரித்த வழக்குகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக சம்பந்தப்பட்ட ஏ.டி.ஜி.பி. அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வரும் போது கண்டிப்பாக, தான் விசாரித்த வழக்குகள் அனைத்தும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தமிழக அரசானது, காலியாக உள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பதவிக்கு தற்போது ஐ.பி.எஸ் அதிகாரி டி.எஸ்.அன்பு அவர்களை நியமித்துள்ளது. டி.எஸ்.அன்பு ஏற்கனவே சென்னையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். நிர்வாக துறையில் இருக்கும் இவரை தற்போது சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜி.யாக தமிழக அரசு நியமித்துள்ளது. தொடர்ந்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரித்த வழக்குகள் அனைத்தும் டி.எஸ்.அன்புவிடம் ஒப்படைக்கப்பட்டு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் அவர் பணியாற்றுவார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.