×

மழை பாதிப்பு தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை அரசின் அலட்சியம் நீடித்தால் 2015 பாதிப்பை தமிழகம் சந்திக்கும் நிலை உருவாகும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்து போன துயரமும் அதிர்ச்சியுமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
உரிய பருவத்தில் பெய்யக்கூடிய மழை இது என்பதால், அதனை உணர்ந்து முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக உருக்குலைந்து கிடப்பதால், இந்தப் பருவ மழைக்கே கடலூர் உள்பட பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலூரில் 3000க்கும் அதிகமான வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. விளை நிலங்களில் பயிர்கள் மூழ்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.

நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள். வாய்க்கால், ஓடை போன்றவை சரியாகத் தூர்வாரப்படாததால் இந்த நிலைமை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக குழந்தைகள் - முதியோர் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் அரசு மருத்துவமனைகள் உரிய வசதிகளுடன் தயாராக இருந்திட வேண்டும். ஆனால், பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்து, நோயாளிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். கவனக்குறைவும் அலட்சியமும் நீடித்தால், 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட செயற்கைப் பெருவெள்ளத்தைப் போன்ற சூழலைத் தமிழகம் சந்திக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும்.

அந்த நிலை இனி ஒருக்காலத்திலும் உருவாகிவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் செயல்பட வேண்டியதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும்.திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகளை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு திமுக சார்பில், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற, முதல்வரின் நேரடிப் பார்வையின் கீழ் தனித் துறை உருவாக்கப்பட்டதும், இந்தியாவிலேயே முதன்முதலாக நலவாரியம் தொடங்கப்பட்டதும் கழக ஆட்சியில்தான். மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி தனி அக்கறை காட்டியவர் தலைவர் கலைஞர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி,  அதற்கு சிறப்பு நேர்முகத் தேர்வு நடத்தி திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்திட  விரும்புகிறேன். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், மாற்றுத்திறனாளிகள் அனைவரும், சம வாய்ப்பினைப் பெற்று மகிழ்ந்திடவும், சமுதாயத்தில் கண்ணியத்துடன் நடத்தப்பட்டு, அனைத்து முன்னேற்றங்களும் கிடைத்திடவும் மீண்டும் மனதார  வாழ்த்துகிறேன்.

Tags : government ,Tamil Nadu ,MK Stalin ,Mathrubhumi - Government , Rainfall impact, Government of Tamil Nadu, MK Stalin
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...