ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளை பெற்று சிலர் முறைகேடு செய்தனர். இது தொடர்பாக மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபேஷ் (45) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ரூபேஷை கேரளா போலீசார் கைது செய்து, திருச்சூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் பெற்ற வழக்கின் விசாரணைக்காக நேற்று மாவோயிஸ்ட் ரூபேஷை கேரளா மாநில போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மாவோயிஸ்ட் ரூபேஷை வரும் 17ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து ரூபேஷை போலீசார் அழைத்து சென்றனர்.