×

மீனுக்கு கட்டிய வலையில் சிக்கிய 4 மலைப்பாம்புகள்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மலையடிவார குளத்தில், மீன்களுக்கு கட்டி வைத்த வலையில் இறந்த நிலையில் 4 மலைப்பாம்புகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அமலரூபம் (60). இவர், மலையடிவாரம் உள்ள பந்தபாறை தாமரைக்குளத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த குளத்தில் தாமரை மலர்கள் அதிகமாக பூக்கும். இந்தப் பூக்களையும், தாமரை இலைகளையும் தினசரி பறித்து, திருவில்லிபுத்தூர் பூக்கடைகளுக்கும், நாட்டு மருந்து கடைகளுக்கும்  விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். மலையடிவாரத்தில் குளம் இருப்பதால், மலைப்பாம்பு மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி வரும்.

கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்மழையால் குளத்திற்கு செல்லாத அமலரூபம், நேற்றுகாலை மீன் பிடிப்பதற்காக குளத்திற்கு சென்றார். அப்போது அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மீன் வலையில், இறந்த நிலையில் 4 மலைப்பாம்புகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘2 நாட்கள் மழை பெய்ததால், தாமரை இலை பறிக்க குளத்துக்கு வரவில்லை. குளத்தில் மீன் வளர்க்கிறேன். அவற்றை பிடிப்பதற்காக சமூக விரோதிகள், நான் இல்லாத நேரத்தில் வலைகளை கட்டியுள்ளனர். அருகில் உள்ள மலைப்பகுதியிலிருந்து வந்த 4 மலைப்பாம்புகள் இந்த வலையில் சிக்கி இறந்துள்ளன. தண்ணீரில் கிடந்ததால் பாம்புகள் அழுகிய நிலையில் உள்ளன. இவை 9 அடியில் இருந்து 12 அடி வரை நீளம் இருக்கும்’’ என்றார்.

Tags : pythons , Snakes
× RELATED தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட...