மதுரை: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள விதிக்க கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருச்சியை சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் திருச்சி கொள்ளிடம் என்பது காவிரி டெல்டா பகுதிகளான 7 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக கருதப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கொள்ளிடம் ஆறு திகழ்கிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முறையாக செயல்படுத்தாத காரணத்தினால் அதிகமான நீர்வரத்தின் காரணமாக பாலங்கள் சேதமடைந்து அதிகப்படியான தண்ணீர் கடலில் சேர்ந்தது. எனவே இதற்கு முக்கிய காரணமே இந்த பகுதியில் முறைகேடாக அதிக அளவில் மணல் குவாரிகள் நடத்தப்படுவதுதான் காரணம், மேலும் இதில பல மணல் குவாரிகள் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி முறைகேடாக செயல்படுகிறது. இந்த மணல் குவாரிகளால் கொள்ளிடம் ஆற்றுக்கு பெரிய ஆபத்து நேரிடும் அபாயம் என கூறப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மணல் குவாரி நடத்த தடை விதிக்க வேண்டும் இல்லையெனில் அதை முறைப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து அரசு தரப்பில் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றில் இது போன்று எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்றும், தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது. ஏனென்றால் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: பொதுபணித்துறை செயலாளர் மற்றும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்துக்கு உரிய பதில் தர உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.