குஜராத்: குஜராத் மாநிலம் ஹீராபூரில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது. தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என்று பல குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் நித்தியானந்தா மீது பாய்ந்துள்ளது.
அதே நேரத்தில் நித்தியானந்தா பாஸ்போர்ட் காலாவதியாகியுள்ளதால் ஜனார்த்தனா ஷர்மா மகள் நந்திதாவுடன் தரை வழியாக நேபாளம் சென்று, அங்கிருந்து கரீபியன் தீவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தனியார் பள்ளி செயல்பட்டு வரும் இடத்தில் சட்ட விரோதமாக ஆசிரமம் நடத்தி வந்ததாலும், ஆசிரமம் மீதான தொடர் புகார்களைத் தொடர்ந்தும் மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது, இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.