மீனம்பாக்கம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (34). இவர், அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிஆர்பிஎப் வீரராக ேவலை செய்து வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், விடுமுறை முடிந்து நேற்று காலை 5.40 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கவுகாத்தி செல்வதற்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள், நாகராஜ் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில், துப்பாக்கி தோட்டா இருந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, பணியின்போது பயன்படுத்தப்படாத துப்பாக்கி தோட்டாவை தனது பிள்ளைகளுக்கு காண்பிப்பதற்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனை ஏற்காத அதிகாரிகள் அவரிடம் இருந்து அந்த தோட்டாவை பறிமுதல் செய்து, அவரின் பயணத்தை ரத்து செய்தனர். பின்னர் அவரை விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் மேலும், விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.