×

ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் திமுக எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் திமுக எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குறுக்கு வழியில், குதிரை பேரம் மூலமாக மராட்டியத்தில் ஆட்சி அமைக்க வியூகம் வகுத்ததை தகர்த்து, வியூகங்களை முறியடித்து, மாநில நலன்  காக்கும் வகையில் கூட்டணியை உருவாக்கி, புதிய ஆட்சி அமைவதற்கு சூத்திரதாரியாகச் செயல்பட்டவரான  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என அன்பழைப்பு விடுத்தார். அதை ஏற்று மும்பை சென்றேன். தேசியவாத காங்கிரஸின் முன்னணித் தலைவரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே மிகுந்த அன்புடன் என்னை வரவேற்று நெகிழச் செய்தார்.

தமிழ்நாட்டின் சார்பில், திமுக தலைவர் என்ற முறையில் சென்றிருந்த உங்களில் ஒருவனான எனக்கு, மேடையில் நடுநாயகமாக அமரும் வாய்ப்பை தந்தனர். முதல்வர் பொறுப்பேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்த போது, அவரும் என் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினார். அப்போது, மராட்டிய மாநிலத்தில் வாழும் 10 லட்சம் தமிழர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். மாநிலக் கட்சியான திமுக எனும் பேரியக்கம், மீண்டும் மீண்டும் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஆற்றல் மிகுந்த சக்தியாக விளங்குகிறபோது, அன்பான எதிரிகளான அரசியல் பிரமுகர்களும், ‘அக்கறை’ கொண்ட ஊடகப் பெருமக்களும் சும்மா இருப்பார்களா? இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவை திமுக ஆதரிப்பதா? மராட்டியத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட பால்தாக்கரே கட்சிக்குத் துணை நிற்பதா எனக் திமுகவை நோக்கி கேள்விக் கணைகள் பாய்கின்றன.

சமத்துவத்தை நிலைநாட்டும் சமூகநீதிதான் திமுகவின் கொள்கை. அதே நேரத்தில், ஜனநாயகத்தின் கழுத்தில் கொடுவாள் பாய்ச்சப்படும்போதும், குதிரை பேரத்தால் ஜனநாயகத்திற்குப் புதைகுழி தோண்டப்படும் போதும், மாநில உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்திட தார்மீக ஆதரவை வழங்குவது என்பதே திமுகவின் நிலைப்பாடு. சிவசேனா  கட்சி தொடங்கப்பட்ட போது, அது, “மராட்டிய மண்ணின் மைந்தர்” முழக்கத்துடன், அம்மாநிலத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய காலம் இருந்தது. தாக்குதல்களும்  நடைபெற்றிருக்கின்றன. தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத  சூழல் ஏற்பட்டால், தமிழ்நாட்டில் வாழும் வடஇந்தியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் அபாயச் சூழலை விளக்கி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.

அதன் பிறகு, மராட்டியம் உள்பட பல மாநிலங்களிலும் தமிழர்கள் மீதான தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, 1978ல் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது தலைவர் கலைஞர் மும்பை சென்றார். மும்பைக்குச் செல்கின்ற அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பால்தாக்கரேவை வீடு தேடிச் சென்று சந்திப்பது தான் வழக்கம். ஆனால், பால்தாக்கரே தலைவர் கலைஞர் தங்கியிருந்த ஓபராய் ஓட்டலுக்கு நேரில் வந்து சந்தித்து உரையாடினார். மாநில  உரிமைகள் தொடர்பாக தலைவர் கலைஞர் கடைப்பிடித்த உறுதியான நிலைப்பாட்டினைப் பாராட்டினார். மராட்டியத்  தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதத்தில் அந்தச் சந்திப்பு அமைந்தது. 2001ம் ஆண்டு தலைவர் கலைஞர் நள்ளிரவில் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்தவர் பால்தாக்கரே.

சிவசேனாவின் சாம்னா பத்திரிகையிலும் அந்த கைதினைக் கண்டித்து செய்தி வெளியிடப்பட்டது. அடிப்படைக் கொள்கைகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தின் மாண்பையும் மாநிலத்தின் நலன்களையும் பாதுகாப்பதற்கான புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது மராட்டிய உறவு. அதிகாரக் கொம்பில் தொங்கிக் கொண்டு ஜனநாயகப் பூமாலையைப் பிய்த்தெறிய நினைத்த பிற்போக்கு சக்திகளிடமிருந்து அதனைப் பத்திரமாக  மீட்டெடுத்திருக்கிறது, மராட்டிய முதல்வர் பதவியேற்பு விழா. திமுக அதில் பங்கேற்றதும், அதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டதும்; ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் திமுக எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம் என்ற பெருமிதத்தால்தான். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : India ,MK Stalin ,DMK ,battle ,volunteers ,Democracy , Democracy, DMK, India, MK Stalin, Letter
× RELATED பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ...