மைசூரு: மைசூரு குவெம்பு நகரை சேர்ந்த சுரேஷ் சந்த் என்பவரின் மகன் அபிஷேக் (25). இவர் மைசூருவில் உள்ள வித்யா விகாஷ் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்பு முடித்தார். இதை தொடர்ந்து, எம்எஸ் படிக்க கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றார். அங்குள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்எஸ். பட்டப்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கலிபோர்னியாவில் அடையாளம் தெரியாத நபரால் அபிஷேக் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் அபிஷேக்கின் பெற்றோர் அமெரிக்காவுக்கு விரைந்தனர். மேலும், அங்கேயே உடலை தகனம் செய்ய அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அபிஷேக்கை கொன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம், அடிக்கடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.